நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று லண்டனை சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக, பொருளாதார சரிவு, பொருளாதார மந்த நிலை, பல துறைகளில் விற்பனை சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் வேலை இழப்புகள் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது. இதனால் தனிநபரின் வாங்கும் திறன் என்பது பெரும் அளவில் குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்தது. அதற்கடுத்த ஜூலை - செப்டம்பர் இடையிலான இரண்டாவது காலாண்டிலும், ஜிடிபி மேலும் குறைந்து 4.5 சதவிகிதத்தில் உள்ளது. இதனால் பொருளாதாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்றுள்ளது. வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு இன்னல்களை நாடு சந்திக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று லண்டனை சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிறுவனம் கூறுகையில், முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறையில் தொடர்ந்து தேக்கநிலை காணப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் காரணமாக கடன் வழங்குவதை குறைத்துள்ளதால் நிதி சுழற்சி ஏற்படவில்லை. தொழில் செய்ய பணம் இல்லாமல் சிறு வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொருளாதார சுழற்சிக்காக வங்கி கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளபோதிலும் அதன் பயன் தொழில்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம்” என்று தெரிவித்துள்ளது.